search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஆர் காங்கிரஸ்"

    • அமைச்சர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானது. அவரின் குற்றச்சாட்டுகள் அரசியல் ஜனநாயகத்திற்கு இழுக்கு.
    • பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் சக பெண் அமைச்சருக்கு எதிராக எவ்வளவு கொடுமையை செய்துள்ளது என்பதை நாடு அறிகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் 40 ஆண்டுக்கு பிறகு பெண் எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

    அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கு சாதி, பாலின தாக்குதலே காரணம் என அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அரசியல் கட்சியினர் அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    அமைச்சர் மீது ஊழல் புகார் ஏதும் இல்லை. அவர் வகித்த துறைகளுக்கு நியமிக்கப்பட்ட செயலர்கள், தலைவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என முதலமைச்சர், எம்.எல்.ஏ.க்களிடம் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். எதற்காக அமைச்சர் பதவியிலிருந்து அவர் நீக்கப்படுகிறார் என முதலமைச்சர் தெரிவிக்க வேண்டும்.

    இது காரைக்காலுக்கான பிரதிநிதித்துவத்தை குறைத்துவிட்டது. பட்டியலின அமைச்சர் பதவியை வேறு யாருக்கு கொடுக்கப் போகிறார்கள்? முதலமைச்சர் பெண் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தார் என்ற பெருமை கிடைத்திருந்தது. எனவே இதை சிந்தித்து பார்த்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம்:-

    அமைச்சர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானது. அவரின் குற்றச்சாட்டுகள் அரசியல் ஜனநாயகத்திற்கு இழுக்கு. தலித் பெண் என்ற காரணத்தால் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளேன். ஆதிக்க சக்திகளின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளேன். இதனால் அமைச்சராக தொடர முடியவில்லை என கூறியுள்ளது.

    என்ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசுக்கு பெரும் அவமானம். 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வருகிறோம் என பிரதமர் மோடி வாய்ச் சவடால் விடுகிறார். பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் சக பெண் அமைச்சருக்கு எதிராக எவ்வளவு கொடுமையை செய்துள்ளது என்பதை நாடு அறிகிறது.

    சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்ட ஒரே பெண் எம்.எல்.ஏ.வுக்கும் வழங்கி அமைச்சர் பதவியை என்ஆர். காங்கிரஸ், பா.ஜனதா அரசு அதிகார பீடத்திலிருந்து இறக்கியுள்ளது. இது பெண் சமூகத்திற்கு எதிரான ஆணாதிக்க மன நிலையை பிரதிபலிக்கிறது. அமைச்சருக்கு ஏற்பட்ட அநீதி.

    இந்திய தேசிய மாதர் சம்மேளன தலைவர் தசரதா:-

    ஒரு பெண் அமைச்சருக்கே இப்படிப்பட்ட நெருக்கடிகள் கொடுக்கப்படுகிறது என்றால் சாதாரண பெண்கள் நிலை என்ன? பாராளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு நிறைவேற்றப்பட்ட நேரத்தில் புதுவையில் 40 ஆண்டுக்கு பின் அமைச்சராக ஒரு பெண் இருப்பதை ஏற்க முடியாத ஆணாதிக்க அரசியல்வாதிகள் வெட்கித்தலைகுனிய வேண்டும்.

    அமைச்சர் சந்திரபிரியங்காவின் ராஜினாமாவுக்கு காரணமான என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம்

    • தலித், பெண் என இரு பெருமைகளோடு இருந்த எனக்கு அதுதான் மற்றவர்களின் உறுத்தல் என்பது தெரியாமல் போனது.
    • சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

    புதுச்சேரி:

    புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் முதலமைச்சர் ரங்கசாமி உட்பட 4 அமைச்சர்கள் உள்ளனர்.

    அவர்களில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த சந்திரபிரியங்கா போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார்.

    இவரிடம் போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலம், வீட்டுவசதி, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, கலைப்பண்பாடு, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகள் இருந்தன.

    இந்த நிலையில் அமைச்சர் சந்திர பிரியங்கா இன்று திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    தனது ராஜினாமா தொடர்பான அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    என்னைச் சுற்றி பின்னப்பட்டுள்ள வலையில் சிக்கியுள்ள நிலையில் நான் இக்கடிதத்தினை எழுதுகிறேன். ஒரு சட்டப்பேரவை உறுப்பினராக மாநில அமைச்சராக என் பணியினை மனத் திருப்தியுடனும் மக்களின் ஆதரவுடனும் இந்த நிமிடம்வரை ஓயாமல் செய்து வருகிறேன்.

    தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்தும் பெண்களும் அரசியலுக்கு வந்தால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என பொதுவாக கூறுவார்கள்.

    ஆனால் கடின உழைப்பும், மன தைரியமும் இருந்தால் இதைப்பற்றி கவலைப்படாமல் களத்தில் நீந்தலாம் என்பதற்கான பல முன்னுதாரணங்கள் வரலாற்றில் உள்ளதை பார்த்து களமிறங்கி கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி மக்களுக்காக இரவு பகலென ஓடி ஓடி உழைத்து வருகிறேன்.

    மக்கள் செல்வாக்கு மூலம் மன்றம் நுழைந்தாலும் சூழ்ச்சி அரசியலிலும், பணம் என்ற பெரிய பூதத்தின் முன்னும் போராடுவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்து கொண்டேன்.

    தலித், பெண் என இரு பெருமைகளோடு இருந்த எனக்கு அதுதான் மற்றவர்களின் உறுத்தல் என்பது தெரியாமல் போனது. தொடர்ந்து சாதிய ரீதியிலும் பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்ந்தேன்.

    சொந்தப் பிரச்சினைகளை ஆணாதிக்க கும்பல் கையில் எடுத்து காய் நகர்த்துதல் நாகரிகமல்ல. ஆனால் தொடர்ந்து குறிவைக்கப்பட்டேன். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள இயலாதல்லவா?

    கண்மூடித்தனமாக அமைச்சராக என் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்பவர்களுக்கு நான் அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் என் துறைகளில் என்னென்ன மாற்றங்கள், முன்னேற்றங்கள் சீர்பாடுகள் செய்துள்ளேன் என்பதை விரைவில் பட்டியலாக சமர்ப்பிக்கிறேன் என உறுதியளிக்கிறேன்.

    சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்க இயலாது என்பதை உணர்ந்து எனது அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன்.

    இதற்காக எனது தொகுதி மக்களிடம் நான் மனமார்ந்த மன்னிப்பினை கேட்டுக்கொள்கிறேன். மேலும் என் மக்களுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினராக என் பணியினை தொடர்ந்து ஆற்றுவேன் என உறுதி அளிக்கிறேன்.

    எனக்கு இப்பதவியினைக் கொடுத்த முதலமைச்சருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவருக்கு எனது ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன் வைக்கிறேன்.

    புதுச்சேரியில் பெரும்பான்மையாக உள்ள இரு சமூகங்கள் வன்னியர் மற்றும் தலித். இச்சமூகங்களில் இருந்து வந்துள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் தம் மக்களுக்காக அயராது பாடுபட்டு வருகிறார்கள்.

    அச்சமூகங்கள் மேலும் மேம்பட காழ்ப்புணர்ச்சியில்லாத அரசியலை உறுதி செய்ய காலியாகும் இந்த அமைச்சர் பதவியை வன்னியர், தலித் அல்லது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு அளித்து நியாயம் செய்ய வேண்டும்.

    மக்கள் பின்புலம் இல்லாவிட்டாலும் பணத் திமிரினாலும் அதிகார மட்டத்தில் உள்ள செல்வாக்கினாலும் பதவிக்கு வந்துவிட துடிப்பவர்களுக்கு இப்பதவியினை கொடுத்து பெரும்பான்மையாக உள்ள வன்னியர், தலித் மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம்.

    எனக்கு வாக்களித்து என்னை சட்டமன்ற உறுப்பினராக்கிய அரசுக்கு முழு ஆதரவு அளித்துவரும் என் மக்களுக்கு எவ்வித இடைஞ்சலும் அளிக்காமல் தாழ்த்தப்பட்ட தொகுதியான எனது நெடுங்காடு தொகுதிக்கு மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டுகிறேன்.

    இதுநாள் வரையில் அமைச்சர் பணியினை திறம்பட செய்வதற்கு உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும், எனக்கு உறுதுணையாக இருக்கும் எனது தொகுதி மக்களுக்கும், என் நலன் விரும்பிகளுக்கும் குறிப்பாக என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து அம்மாக்கள், சகோதரிகள், தோழிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை இரு கரம் கூப்பி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இறுதியாக, பெண்களுக்கான முன்னுரிமை, அதிகாரத்தில் பங்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு என மேடைகளில் மட்டுமே முழங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்ளவும் விரும்புகிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    அமைச்சர் சந்திர பிரியங்கா கடந்த 6 மாத காலமாக தனது துறைகளில் செயல்படவில்லை என்று குற்றச்சாட்டு இருந்தது. இது தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமியிடம் புகார்களும் சென்றது. அவர் சந்திர பிரியங்காவை அழைத்து அறிவுரையும் கூறினார்.

    ஆனால், அவரது நடவடிக்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இதனிடையே நேற்று முன்தினம் முதலமைச்சர் ரங்கசாமி கவர்னர் தமிழிசையை ராஜ்நிவாஸில் சந்தித்தார். அப்போது கவர்னர் தமிழிசையிடம், அமைச்சர் சந்திர பிரியங்கா செயல்பாடு பற்றி அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

    அவரை நீக்கவும் திட்டமிட்டதாகவும் தெரிகிறது. இதனால், பதவியை பறிக்கும் முன்பு, அமைச்சர் சந்திர பிரியங்கா முன்கூட்டியே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    • கட்சிக்கு உழைத்தவர்களுக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறினார்.
    • கட்சியினர் பதவிகள் இல்லாததால் சோர்வான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியானது.

    புதுச்சேரி:

    புதுவையில் முதலமைச்சர் தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு நடக்கிறது.

    ரங்கசாமி பதவியேற்று 2 ஆண்டு முடிவடைந்துள்ளது. ஆட்சியில் முதலமைச்சர் உட்பட 4 அமைச்சர், துணை சபாநாயகர், அரசு கொறடா பதவிகளை என்.ஆர். காங்கிரசாரும், சபாநாயகர், 2 அமைச்சர் பதவியில் பா.ஜனதாவினரும் உள்ளனர்.

    ஆட்சியில் இடம் பெறாத என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா ஆதரிக்கும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் வாரிய பதவி வேண்டும் என தொடர்ந்து கேட்டு வருகின்றனர். கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில்கூட இது எதிரொ லித்தது.

    எம்.எல்.ஏக்கள் பேசும் போது, அரசு சார்பு நிறுவன தலைவர்களாக தங்களை நியமித்தால் நஷ்டத்தில் இருந்து மீட்டு லாபகரமாக செயல்படுத்துவோம் என தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தினர்.

    ஏற்கனவே பா.ஜனதா தரப்பில் எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவி கேட்டு முதலமைச்சர் ரங்கசாமியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்றொரு கட்சியான அ.தி.மு.க.வுக்கு எம்.எல்.ஏ.க்கள் இல்லை. ஆனாலும் தேர்தல் உடன் படிக்கையின்படி தங்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கு வாரிய பதவி அளிக்க வேண்டும் என அ.தி.மு.க. தரப்பிலும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ஆனாலும் கடந்த 2 ஆண்டு காலமாக முதலமைச்சர் ரங்கசாமி மவுனம் சாதித்து வருகிறார். இருப்பினும் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆண்டு விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது, கட்சிக்கு உழைத்தவர்களுக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறினார்.

    இது வாரிய பதவியை மையமாக வைத்தே ரங்கசாமி பேசியதாக கருதப்பட்டது.

    இந்நிலையில் கடந்த மாதம் 7-ந்தேதி ரங்கசாமி முதலமைச்சராக பொறுப்பேற்று 2 ஆண்டு நிறைவு பெற்றது. இதை என்.ஆர். காங்கிரஸ் தரப்பில் உற்சாகமாக கொண்டாடவில்லை. இதற்கு கட்சியினர் பதவிகள் இல்லாததால் சோர்வான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியானது.

    அதே நேரத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணிக்கு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது அவசியமானது. இல்லாவிட்டால் ஆளும்கட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாக கருதப்படும்.

    எனவே பாராளுமன்ற தேர்தலை சந்திக்க கட்சியினர், எம்.எல்.ஏ.க்களை உத்வேகப்படுத்த தொகுதிகளில் வாக்கு பெற்றுத் தரும் எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்குவது அவசியம் என்ற நிலை உருவாகியுள்ளது.

    பா.ஜனதா, அ.தி.மு.க. தரப்பிலும் வாரிய தலைவர் பதவியை வழங்கும்படி நெருக்கடி அளிக்கின்றனர். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசிக்க தொடங்கியுள்ளார்.

    • சட்டமன்றம், பாராளுமன்ற தேர்தல் காலங்களில் மாநில அந்தஸ்து விவகாரம் அனைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெறும்.
    • முதலமைச்சர் ரங்கசாமி, தான் கலந்துகொள்ளும் அரசு விழாக்களில் எல்லாம் மாநில அந்தஸ்து பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசி வருகிறார்.

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.

    மத்திய அரசிடம் மாநில அந்தஸ்தை வலியுறுத்தி புதுவை சட்டசபையில் இதுவரை 15-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்தே முதலமைச்சர் ரங்கசாமி 2011-ம் ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தொடங்கி ஆட்சியை பிடித்தார்.

    மாநில அந்தஸ்து கோரிக்கை அவ்வப்போது வலுப்பெறுவதும், பின்னர் அடங்குவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. சட்டமன்றம், பாராளுமன்ற தேர்தல் காலங்களில் மாநில அந்தஸ்து விவகாரம் அனைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெறும்.

    தேர்தலுக்கு பிறகு கோரிக்கை மாயமாகிவிடும். இதேநிலைதான் பல ஆண்டாக நீடித்து வருகிறது. சமீபத்தில் முதலமைச்சர் ரங்கசாமி ஒரு விழாவில் பேசும்போது, மாநில அந்தஸ்து இல்லாததால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற காலதாமதம் ஏற்படுகிறது என்றும் இது மன உளைச்சலை உருவாக்குவதாகவும் பேசினார்.

    இதையடுத்து மாநில அந்தஸ்து விவகாரம் மீண்டும் சூடுபிடித்தது. புதுவையில் பல்வேறு சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து மாநில அந்தஸ்து வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.தி.மு.க. மத்திய அரசை வலியுறுத்தி பந்த் போராட்டம் நடத்தியுள்ளது.

    அதோடு முதலமைச்சர் ரங்கசாமி, தான் கலந்துகொள்ளும் அரசு விழாக்களில் எல்லாம் மாநில அந்தஸ்து பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசி வருகிறார். ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடந்த வக்கீல்கள் சேம்பர் அடிக்கல் நாட்டு விழாவில் மாநில அந்தஸ்து பெற நீதிபதிகள் ஆலோசனை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

    விழாவில் பங்கேற்ற மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூவிடம் மாநில அந்தஸ்து வலியுறுத்தி மனுவும் அளித்தார். இந்த நிலையில் கூட்டணியில் ஆட்சியில் அங்கம் வகிக்கும் பா.ஜனதா, புதுவைக்கு மாநில அந்தஸ்து அவசியமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

    பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் கூறும்போது, புதுவைக்கு சொந்தமாக மின் உற்பத்தி, கனிம வளங்கள் இல்லாததால் மாநில அந்தஸ்து கொடுத்தால் வளர்ச்சி பாதிக்கும் என்றும் மாநில அந்தஸ்து குறித்த சாதக, பாதகங்களை ஆராய வேண்டும் என்றும், மக்களை பாதிக்காத மாநில வளர்ச்சியை பா.ஜனதா ஆதரிக்கும் என்றும் கூறினார்.

    இதனால் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மத்தியில் பா.ஜனதா ஆட்சி நடைபெறும் நிலையில், புதுவைக்கு மாநில அந்தஸ்து தேவையா? என்ற ரீதியில் பா.ஜனதா மாநில தலைவர் கேள்வி எழுப்பியிருப்பது மாநில அந்தஸ்தை வலியுறுத்தும் கோரிக்கைக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    ×